×

ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு

ஸ்ரீநகர்: தங்கள் முதலாளிகளுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனிமத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும் பேட்டரி உற்பத்திக்கு லித்தியம் கனிமம் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் லித்தியத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் அமெரிக்கா, பொலிவியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, சீனா ஆகிய நாடுகளில் லித்தியம் கனிம இருப்பு அதிகளவில் உள்ளது. இந்தியா இதுவரை அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து லித்தியம் இறக்குமதி செய்து வந்தது.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமைனா பகுதியில் லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டதாக கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.

தற்போது அந்த லித்தியத்தை வெட்டி எடுக்கும் பணிகளுக்கான ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விட ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜ அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முக்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீரின் நீர்வளங்கள், கனிம வளங்களை கொள்ளை அடித்த பாஜ அரசு தற்போது லித்தியத்தின் மீது கண் வைத்துள்ளது.

லடாக் பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளை பாஜ ஏன் புறக்கணிக்கிறது என்பது இப்போது தெரிகிறது. லித்தியத்தை வெட்டி எடுப்பதற்கான ஏல அனுமதியை பாஜ அரசு அதன் ஆதரவு பெற்ற முதலாளிகளுக்கு பரிசாக தரும். அதில் கிடைக்கும் சட்டவிரோத வருமானத்தை அந்த நிறுவனங்கள் பாஜவுக்கு தேர்தல் நிதியாக தரும். இப்போது பாஜவுக்கும், அதன் முதலாளிகளுக்கும் உள்ள தொடர்பு புரிகிறது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : JAMMU ,MEGABOBA MUKTI ,Srinagar ,Megapooba Mukti ,India ,Bajaj ,Megabupa ,Mukti ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 விமானப்படை வீரர்கள் காயம்